Thursday, March 4, 2010

சாமியார்கள் ஏன்? எதற்கு? எப்படி?

சுஜாதா ஏன்? எதற்கு? எப்படி? புத்தகத்தில் காசு பிடுங்கும் சாமியார்கள் மற்றும் குருக்கள் பற்றிய கேள்விக்கு பதில்அளித்துள்ளார். இப்போது நடக்கும் நித்தியானந்தர் பற்றி பார்க்கும் போது மனது வெதும்புகிறது....

இதோ இங்கே பாருங்கள்....
கேள்வியும் பதிலும்...

கேள்வி : ரமண மகரிஷி, ராமகிருஷ்ணர், சத்யசாயி பாபா, ஓஷோ, மாதா அமிர்தானந்தமயி என்று எந்த ஆன்மீக அமைப்பை எடுத்துக்கொண்டாலும் உலகெங்கும் கிளைகள். படிக்காத மற்றும் படித்த டாக்டர்கள், இஞினீயர்கள், வெளிநாட்டவர்கள் போன்ற லட்ச கணக்கான மக்கள் கூட்டம். இதென்ன... மாஸ் ஹிஸ்டீரியாவா அல்லது மாஸ் ஹிப்னாடிஸமா?

பதில்: இவை அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது Domino effect என்ற சங்கதி அருகருகே இருக்கும் டாமினோக்களில் ஒன்றை தள்ளிவிட்டால் மற்றது தொடர்ந்து விழுமே... சைக்கிள் ஸ்டாண்டில் கூட பார்த்திருப்பீர்கள். அந்த வகைதான் இந்த இயக்கங்கள் பிரபலமடைவதும்! யாரோ ஒருத்தர் தனக்கு நிகழ்ந்த நல்லதைச்சொல்ல, அவர் மற்றொருவருக்குச் சொல்ல... மெள்ள மெள்ள அது தேச அளவுக்கு ஏன், உலகளவுக்கு விரிகிறது.

இவற்றின் ஆதாரமான இயக்கு சக்தி மனிதன். என்னதான் இஞினீயரோ, டாக்டரோ, வெளி நாடோ, உள் நாடோ, தன் பிறப்பு ‍ இறப்பைப் பற்றி தெளிவில்லாமல் இருப்பதும் மரணத்துக்குப் பின் என்ன? என்கிற கேள்வி ‍ பதில் அளிக்காமலேயே இருப்பதும்தான். இந்த uncertainity - நிச்சயமின்மை அவனை இம்சிக்கிறது. ஏதாவது ஆணியில் தன் நம்பிக்கையை மாட்டிவைக்க விரும்புகிறான். முழுக்க முழுக்க பகுத்தறிவு வாதமும் ஏன் ஏன் என்கிற முடிவில்லாத கேள்விகளும் அவனுக்கு பிடிக்கவில்லை. ஓர் எல்லைக்கு பிறகு, கேள்வி கேட்காமல் நம்பவே விரும்புகிறான். அந்த எல்லை ஆளுக்கு ஆள் மாறுபடும். ஓர் எளிய மனதுக்கு தெருக்கோடி பிள்ளையாரில் துவங்கி, அண்ட சராசரங்களையும் பிரபஞ்ச விசைகளையும் ஆராய்ந்த ஐன்ஸ்டைனுக்கு இறுதியில் God என்ற ஓர் எளிய வார்த்தை தேவைப்பட்டிருக்கிறது. ஸ்டீபன் ஹாக்கின் போன்றவர்கள் கூட Determinism பற்றி பேசும் போது. ஆரம்ப கணத்தில் ஓர் எல்லையற்ற சக்தியைச் சொல்ல வேண்டியிருந்தது. தெருக்கோடி பிள்ளையாரா இல்லை க்வாண்டம் இயற்பியலா இடையில் எத்தனையோ... மகான்கள். எல்லோருக்கும் பகுத்தறிவுக்கான எல்லை உண்டு.

என்னைப் பொறுத்தவரை இந்த நம்பிக்கைகளால் நல்லது நிகழும் வரை போனால் போகட்டும் போகிறது நம்பிவிட்டுப் போகட்டும் என்று விட்டு விட வேண்டியதுதான். ;-)

No comments:

Post a Comment