எனக்கு நேற்று இரவு முதல் உன்னை கொல்ல வேண்டும் என்ற எண்ணமே தோன்றுகிறது!
எதற்கு தான் என்னை காதலித்தாய்? இப்போது கைவிட்டு இருக்கிறாய், இன்னொருவனை கைபிடிக்க?
சிம்ரன் என் காதலி. நான் டெல்லியில் வேலை பார்த்த பொது, கூட வேலை செய்தவள். பஞ்சாபி. அருமையான அழகு. நான் தான் முதல் காதலன். தொட்டும் தொடாமல் பழகும் விதம்.
டில்லியில், வேண்டுமென்றால் எல்லாம் செய்யும் காதலர்கள் நடுவில், கல்யாணத்திற்கு அப்புறம் தான் எல்லாம் என்று சொன்ன உன் உள்ளம் எனக்கு பிடித்தது.
நான் சாதாரண ஆள், அப்பா போலிஸாக நாணயமாக இருந்து சம்பாரித்து படிக்க வைத்தார். எப்படியோ கஷ்டப்பட்டு பொறியாளர் ஆக்கினார். கல்லூரியிலேயே கையில் வேலை... டில்லி பயணம். வேறு ஒரு வாழ்க்கை வாழ பழக்கம் ஆனது!
மாதமானால், சம்பளத்தில் ஒரு பகுதி மறக்காமல் அம்மாவிற்கு ட்ரான்ஸ்பர் செய்துவிடுவேன். அப்பா சொத்து ஒன்றும் சேர்த்து வைக்காமல் அகாலமாக இறந்தார். நல்ல பழக்க வழக்கங்களே என் சொத்து. அதை நீ மற்ற போகிறாயா? அதுவும் கொலை செய்ய தூண்டும் அளவிற்கு?
உணவே என் கெட்டபழக்கம். பண்ணீர் என் வயிற்றிற்கு ஒத்துக்கொள்ளாவிட்டாலும், நீ சாப்பிடுகிறாய் என்பதற்காக விடாமல் சாப்பிட்டேன். ஒரு வழியாக என் வயிறும் சரிபட்டது. ஓயாமல் பஞ்சாபி கலந்து ஹிந்தி உன்னிடம் கற்றேன். விடாமல் உன்னை காதல் செய்தேன். நாம் பார்க்காதே இடம் ஒன்று உள்ளதா?
சிம்ரன், நீ டிவி பாட்டு போட்டிக்கு செல்ல வேண்டும் என்ற பொது, இரவு பகல் பார்க்காமல் உன்னோடு துணையிருந்து, பல வித பாடல்களை அழகாக மெருகூட்டி பாட வைக்க துணை புரிந்தேன். அதற்கு பலன் தான இன்னொருவனுடன் ஓடிப்போவதா? நிச்சயம், உன்னை கொல்ல வேண்டும் !
போட்டியின் பொது நீ பலருடன் பழகினாய், சரியான பாசை புரியாததால் நான் சிரித்துக்கொண்டு விட்டுவிட்டேன். என்ன பேசினாய் என்று தெரியவில்லை. ஆனால் அந்த மல்வீந்தருடன் பழக ஆரம்பித்து, பைக்கில் செல்லும் போதெல்லாம் நான் கண்டுக்கொள்ளவில்லை. ஒரே பாசை பேசுகிறாய் என்று கண்டுக்கொள்ளாமல் விட்டு விட்டேன்.
அந்த பழக்கம் அவனோடு நெருங்கி பழகும் விதமாகி, நீ உன்னையே கொடுக்கும் நிலை வந்த பொது, நான் அரண்டு விட்டேன். "இப்போது என்ன?" என்று கேட்டு விட்டு, என்னை விட்டு போனாய். காதலை மறந்தாய்! சே!
இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேன், என் அம்மா நார்த் இந்திய டூர் வந்த பொது, எவ்வளவு அன்பாக நடந்துக்கொண்டாய்... நான் உன்னை கட்டிக்கபோகிறவள் என்று வேறு அறிமுகம் செய்துவிட்டேனே? ஒரே மகன் பாசம் தான் பெரிது என்று எனக்கு ஒப்புதல் கொடுத்தார். இங்கு இருக்கும் பழக்கங்கள் படிக்காமல் மீண்டும் ஊருக்கே சென்று விட்டார். இருந்தாலும், உன்னை பற்றி விடாமல் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருப்பார். இப்படி செய்துவிட்டாயே?
என் கனவுகள் எல்லாம் கலைத்து விட்டாயே? நான் ஒன்றும் கோழை இல்லை தற்கொலை செய்துக்கொள்ள! உன்னை கொல்லாமல் விடமாட்டேன். இதோ வருகிறேன்... எங்கே அந்த கத்தி?
"ஹா..... யார்ரா அந்த கல்லை வாசலில் போட்டு வைத்தது?"
*******
"ஸாப் ஸாப் உட்டோ சாப்" அந்த காவலாளி அவனை எழுப்பிக்கொண்டு இருந்தான். அவன் எழவில்லை. படிகளின் அருகில் ரத்தம் உறைந்து விழுந்து இருந்தான். இறந்துவிட்டான் போல! அவன் நெஞ்சில் கத்தி ஒன்று ஆழமாக பாய்ந்திருந்தது. அவனே குத்திக்கொண்டான் போல....
போலீஸ வேன் வந்தது. விசாரணை, போஸ்ட் மார்ட்டம் முடிந்த பிறகு, அவனுக்கு தெரிந்த நபர்களை, அவன் ஐ.டி. டாகுமன்ட்ஸ்... வைத்து போலீஸ சிம்ரன் குடும்பத்தை கண்டுபிடித்து, அவன் அம்மாவை அழைத்து வந்து..... அடக்கம் செய்தார்கள்.
சிம்ரன் சோகமாக இருந்தாள்... முகமெல்லாம், அவளுக்கு வேர்த்திருந்தது. சிம்ரன் காதில் அவன் சொல்வது கேட்டது, "உன்னை கொல்ல வேண்டும்!"
-----------------------------------
இந்த சிறுகதை, என் சொந்த கற்பனையில் உருவானது! உரையாடல் சிறுகதை போட்டிக்கு அனுப்புகிறேன்! கலந்துக்கொள்ளும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.